Breaking News

தமிழில் பயன்பாட்டிற்கு வரும் கூகுள் ஏஐ பார்ட்; 40 புதிய மொழிகளில் அறிமுகம்..!

செயற்கை நுண்ணறிவு குறித்த அச்சங்கள் இருந்தபோதும், அதன் வளர்ச்சி தவிர்க்க இயலாத ஒன்றாக மாறி வருகிறது. பல மணிநேரம் எடுக்கும் வேலைகளைக் கூட நிமிடப் பொழுதினில் முடித்துவிடும் துரித தன்மை, பலரையும் ஏஐ பக்கம் திரும்பச் செய்துள்ளது.

Bard

சமீபத்தில் கூகுள் நிறுவனத்தின் பார்ட் (Bard) பயன்பாட்டிற்கு வந்து அனைவரின் கவனத்தையும் பெற்றது. இருந்த போதும் தமிழ் மொழியில் பயன்பாட்டிற்கு வரவில்லை என்று பலரும் வருத்தம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்திய மொழிகளில் தமிழ் உள்பட இந்தி, தெலுங்கு, பெங்காலி, கன்னடம், மலையாளம், மராத்தி மற்றும் உருது போன்ற 9 மொழிகளிலும் மற்றும் சர்வதேச அளவில் 40 புதிய மொழிகளில் பார்ட் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

அரபு, சைனீஸ், ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ் போன்ற வெளிநாட்டு மொழிகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், பிரேசில் மற்றும் ஐரோப்பிய  பொருளாதாரப் பகுதியில் (EEA) உள்ள 27 நாடுகள் உட்பட 59 புதிய நாடுகளுக்கு பார்ட் பயன்பாட்டிற்கான அணுகலைக் கூகுள் விரிவுபடுத்தியுள்ளது.

இது குறித்து கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``பயனர்கள் ஒரு வார்த்தையின் சரியான உச்சரிப்பைக் கேட்க விரும்பினால் அல்லது கவிதை அல்லது ஸ்கிரிப்டைக் கேட்க விரும்பினால் இந்த புதிய அம்சங்கள் உதவியாக இருக்கும். பயனர்கள் பார்டின் பதில்களின் தொனியையும், பாணியையும் ஐந்து வெவ்வேறு விருப்பங்களுக்கு மாற்றலாம்.

AI

ப்ராம்ட்களில் (prompt) படங்களைச் சேர்க்கும் திறன், பார்டின் பதில்களை உரக்கக் கேட்பது மற்றும் பார்டின் பதிலை நீளமாகவோ அல்லது குறைவாகவோ மாற்றும் திறன் போன்ற புதிய அம்சங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சம் ஆங்கில மொழியில் உள்ளது, விரைவில் புதிய மொழிகளிலும் விரிவுபடுத்தப்படும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



from விகடன்

No comments