QR Code: ஸ்கேன் செய்யும் கறுப்பு வெள்ளைப் படத்தின் ரகசியம் என்ன? - இது தெரியாமப் போச்சே?! - 13
நாம் தினமும் QR Code ஸ்கேன் செய்கிறோம். கறுப்பு , வெள்ளை கலந்த அந்தப் படம் எப்படி வேலை செய்கிறது என்று தெரியுமா?
ஸ்கேனர் எப்போதும் கறுப்பு வரிகளைப் படிக்காது, அவற்றுக்கு இடையே உள்ள வெள்ளை இடைவெளியைத்தான் படிக்கிறது. Barcode, QR Code கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களுக்கு இடையிலான வேறுபாட்டை (Contrast) அடிப்படையாகக் கொண்டே செயல்படுகின்றன. வெள்ளை நிறம் ஒளியைப் பிரதிபலிக்கும், கருப்பு நிறம் ஒளியை ஈர்க்கும் என்ற அறிவியல்தான் இங்கும் பயன்படுகின்றது.
எனவே, ஸ்கேனர் வெளியிடும் ஒளியானது கறுப்பு வரிகளில் பட்டு ஈர்க்கப்படுகிறது, ஆனால் வெள்ளை இடைவெளிகளில் பட்டு மீண்டும் ஸ்கேனரில் உள்ள சென்சாருக்குத் திரும்புகிறது. இந்த ஒளித் திருப்பம் (Reflected light) தான் 0 மற்றும் 1 என்ற பைனரி எண்களாக மாற்றப்பட்டு புரிந்துகொள்ளப்படுகிறது. எனவே, ஸ்கேனர் அந்த வெள்ளை இடைவெளிகள் உருவாக்கும் ஒளி அமைப்பைத்தான் (Pattern) வாசிக்கிறது.
இதன் பின்னணி மிகவும் சுவாரசியமானது. 1948-ம் ஆண்டு நார்மன் ஜோசப் உட்லேண்ட் (Norman Joseph Woodland) என்பவர், தனது நண்பர் பெர்னார்ட் சில்வருடன் இணைந்து பல்பொருள் அங்காடிகளில் பொருட்களை எளிதாக அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை உருவாக்க நினைத்தார்.
ஒருநாள் மியாமி கடற்கரையில் அமர்ந்திருந்த உட்லேண்ட், சிறு வயதில் தான் கற்ற Morse code (தகவல்களைப் பரிமாறும் புள்ளிகள் மற்றும் கோடுகள்) பற்றி யோசித்தார். அப்போது தனது நான்கு விரல்களை மணலில் இழுத்தபோது ஏற்பட்ட வரிகளைப் பார்த்து அவருக்கு உதித்த யோசனைதான் இந்த பார் கோட்! 1952-ல் இதற்கு அவர்கள் காப்புரிமை பெற்றனர்.
உலகிலேயே முதன்முதலாக 1974-ஆம் ஆண்டு ஓகியோவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில், Wrigley's chewing gum பாக்கெட்டில்தான் பார் கோட் அதிகாரபூர்வமாக ஸ்கேன் செய்யப்பட்டது.
பார் கோடின் அடுத்தகட்ட தொழில்நுட்பப் பரிணாமமே நாம் இன்று சாதாரணமாகப் பயன்படுத்தும் QR Code.
from விகடன்
No comments