Breaking News

OnePlus ரசிகர்களுக்கு ஷாக்... இந்தியாவிலிருந்து வெளியேறுகிறதா OnePlus நிறுவனம்?

ஒருகாலத்தில் 'குறைந்த விலையில் பிரீமியம் அனுபவம்' என்ற அடையாளத்துடன் ஸ்மார்ட்போன் சந்தையை அதிரவைத்த OnePlus, இன்று உலகம் முழுவதும் தனது எதிர்காலம் குறித்த கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய சூழலில் உள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா சந்தைகளில் OnePlus தனது செயல்பாடுகளை நிறுத்தவுள்ளதாக வெளியான தகவல்கள், இந்தியப் பயனர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

மேலும், 2027-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலிருந்தும் OnePlus வெளியேறலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

OnePlus-ன் தாய் நிறுவனமான OPPO, தனது உலகளாவிய வணிகத்தை மறுசீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, OnePlus அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் புதிய தயாரிப்புகளை நிறுத்தி, பின்னர் இந்தியா உள்ளிட்ட பிற சர்வதேச சந்தைகளிலிருந்தும் படிப்படியாக விலகும் திட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Oneplus Nord 2T  5G
Oneplus Nord 2T 5G

2013-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட OnePlus, 'Never Settle' என்ற வாசகத்துடன் ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமானது. அதிக விலை கொண்ட போன்களுக்கு மாற்றாக, குறைந்த விலையில் அதே தரமான வசதிகளை வழங்கியதால், 'Flagship Killer' என்ற பட்டத்தைப் பெற்றது.

இந்தியாவில் OnePlus One, OnePlus 3, OnePlus 5, OnePlus 7 Pro, OnePlus Nord உள்ளிட்ட மாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

OnePlus-இன் கேமரா, Alert Slider வசதி, OxygenOS அனுபவம் மற்றும் அதிவேக Warp Charge / SuperVOOC சார்ஜிங் தொழில்நுட்பம் ஆகியவை அந்த நிறுவனத்தின் அடையாளங்களாகக் கருதப்படுகின்றன.

இதனால் OnePlus-க்கு மிகப்பெரிய பயனர் வட்டாரம் உள்ளது. குறிப்பாக, பிரீமியம் போன் சந்தையில் Samsung மற்றும் Apple-க்கு மாற்றாகப் பலரின் முதல் தேர்வாக OnePlus விளங்கியது.

OnePlus Nord 2

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மாற்றங்கள் நடைபெற்று வந்தாலும், இந்தியாவில் நிறுவனம் தனது செயல்பாடுகளைத் தொடரும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இருப்பினும், OPPO-வின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் காரணமாக எதிர்காலத்தில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பது தொழில்நுட்ப உலகின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் உலகம் முழுவதும் உள்ள அதன் ரசிகர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.



from விகடன்

No comments